திமுக முப்பெரும் விழா: திருச்சி கலெக்டர் மீது வழக்கு
திருச்சி: திருச்சியில் இன்று நடக்கும் திமுகவின் முப்பெரும் விழாவுக்கு அனுமதி அளித்ததில், விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திமுக முப்பெரும் விழா திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொள்கின்றனர்.
முப்பெரும் விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் கருணாநிதி, அண்ணா, பெரியார், ஸ்டாலின் போன்றவர்களின் டிஜிட்டல் பேனர், கட் அவுட், போஸ்டர், அலங்கார வளைவுகள் அதிக அளவில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் அமைப்பை சார்ந்த ஒருவர் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மாவட்ட கலெக்டர் சவுண்டையா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், பொது நிகழச்சிகள் நடைபெறும் மூன்று நாட்களுக்கு முன்னரும், நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் இரண்டு நாட்கள் மட்டும்தான் பேனர், கட்டவுட், விளம்பர தட்டிகள் வைக்க உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
குறிப்பாக பிரதான சின்னங்களையும், ரவுண்டானக்களையும் மறைத்து பேனர், கட்டவுட், விளம்பர தட்டிகள் வைக்க கூடாது என்று தமிழக அரசு 29-09-2007ல் அரசாணை பிறப்பித்துள்ளது.
ஆனால் அந்த அரசாணையை பிறப்பித்த தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளும் விழாவில் விதிகள் பின்பற்றப்படவில்லை. மாறாக காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்று மனுவில் அவர் கூறியுள்ளார்
இந்த வழக்கு நீதிபதி சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் ஆட்சித் தலைவரை 19ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவர் ஆஜராகவில்ைல. இதையடுத்து வருகிற30ம் தேதிக்கு நீதிபதி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.