மின்துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை: ராமதாஸ்

கோவை வந்த ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறை பொதுமக்களை மிகவும் பாதித்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் பெறப்படுகிறது. விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் அளவுக்கு மின்துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
மின்துறைத் தலைவர், உறுப்பினர்கள் பொம்மை போல செயல்படுகின்றனர். இந்த நிலை நீடித்தால் இரண்டு ஆண்டுகளில் மின்துறை திவாலாகிவிடும். தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக் குறைக்கு பொறுப்பேற்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதவி விலக வேண்டும்.
ரூபாய்க்கு கிலோ அரிசி, ரூ.50க்கு 10 மளிகை பொருள் திட்டங்கள் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அறிவிக்கப்பட்டவை. தேர்தல் முடிந்ததும் இவ்விரு திட்டங்களும் மறைந்துவிடும். ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டம், கடத்தல்காரர்களுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் மட்டுமே பயன்தரும். பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக இருக்காது.
அதேபோல இலவச கலர் டிவி திட்டமும் வீணான திட்டமே. தமிழக அரசின் இணையதளத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்து காத்திருக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை 49 லட்சத்து 58,231 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆளுக்கொரு வேலை கொடுத்தாலே இலவச திட்டங்கள் தேவைப்படாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications