மாணவன் மர்ம சாவு: உடலை வாங்க மறுத்து போராட்டம்
பரமக்குடி: பரமக்குடி அருகே மர்மமான முறையில் இறந்த பள்ளி மாணவனின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். குற்றவாளியை கைது செய்யவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாக முஸ்லீம் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
பரமக்குடி எமனேசுவரத்தைச் சேர்ந்தவர் ராஜா மஸ்தான்(15). கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாரி. கடந்த 18ம் தேதி தேர்வு எழுத பள்ளிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அவரது உடல் நேற்று காலை தண்றாதேவிப்பட்டிணம் வைகையாற்றில் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த ராஜாவின் பெற்றோர், உறவினர்களும் முஸ்லீம் அமைப்புகளும் மருத்துவமனையில் குவிந்தனர். ராஜாவை கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளியை கைது செய்யக் கோரியும் தர்ணா போராட்டம் செய்தனர்.
கைது செய்யும் வரை ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி மறுத்து விட்டனர். இதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து குளிர் சாதன பெட்டி வரவழைக்கப்பட்டு அதில் உடலை போலீஸார் வைத்துள்ளனர்.
இந்நிலையில் போலீஸார் ராஜாவின் உறவினர்களை அழைத்து சமரசம் செய்தனர். ஆனால் இரண்டாவது நாளாக ராஜாவின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து பரமக்குடி மேலப் பள்ளிவாசலில் மாவட்ட ஐக்கிய ஜமாத் தமுமுக, தவ்ஹீத் ஜமாத், மனித நீதி பாசறை, தேசிய லீக், உளமாக்கள் சபை ஆகிய அமைப்புகளில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
அப்போது, இன்று மாலை 5 மணிக்குள் குற்றவாளியை கைது செய்யவில்லை என்றால் நாளை காலை 10 மணிக்கு எமனேசுவரம் பள்ளிவாசலில் இருந்து தாலுகா அலுவலகத்துக்கு பேரணியாக சென்று போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் பரமக்குடியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications