லோக்சபா: பாஜக மூத்த தலைவர்களுக்கு சீட் மறுப்பு?
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் மூத்த தலைவர்களுக்குப் பதில் அதிக அளவில் இளையவர்களுக்கு சீட் தர பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜக பல விதங்களிலும் தயாராகி வருகிறது. ஓட்டுக்கு நோட்டு, விலைவாசி உயர்வு, அணு ஒப்பந்தம், ராமர் பாலம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு தேர்தல் பிரசாரத்திற்குத் தயாராகி வருகிறது.
தேர்தலில் பல மூத்த தலைவர்களுக்கு சீட் கொடுத்து லோக்சபாவில் வாதிடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முன்பு பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த முடிவை கட்சி மேலிடம் மாற்றிக் கொண்டுள்ளதாம்.
மூத்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் தற்போது ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் லோக்சபாவுக்கு வர விருப்பத்துடன் உள்ளனர்.
இருப்பினும் இவர்களை லோக்சபாவுக்கு கொண்டு வரும் முடிவில் பாஜக இல்லையாம். இவர்களுக்குப் பதில் இளம் தலைமுறையினரை அதிக அளவில் லோக்சபா உறுப்பினர்களாக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். அப்போதுதான் கட்சிக்கு வலிமை கிடைக்கும் என கட்சி மேலிடம் கருதுகிறதாம்.
இது இளம் தலைமுறை தலைவர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications