எழுத்தாளர்கள் கூட்டத்தில் திடீர் கல்வீச்சு-எஸ்.ஐ. காயம்
சென்னை: சென்னை அருகே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில், இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
சென்னை அருகே போரூரில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பெரியாரின் 130வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநிலத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பலர் பங்கேற்றுப் பேசினர். முத்து என்பவர் பேசுகையில், இந்துக் கடவுள்கள் குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் 20க்கும் மேற்பட்ட இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் முத்துவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ரகளையில் இறங்கினர். கல்வீசி தாக்கப்பட்டது. இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன.
இதையடுத்து கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை விரட்டினர். இதனால் அங்கு பெரும் அமளியாக இருந்தது. உடனடியாக அப்பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன.
இந்த வன்முறையில் சில கடைகள் தாக்கப்பட்டன. ரவி, காட்டுராஜா உள்ளிட்ட 3 எழுத்தாளர்கள் காயமடைந்தனர். சப் இன்ஸ்பெக்டர் கணேஷுக்கும் காயம் ஏற்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து போரூர் காவல் நிலையத்திற்கு விரைந்த எழுத்தாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர். பின்னர் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications