தலைமை ஆசிரியர் மாற்றம்-மாணவர்கள் சாலை மறியல்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியரை திடீரென மாற்றம் செய்ததை எதிர்த்து பள்ளி மாணவ மாணவிகள் தேர்வை புறக்கணித்து சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், வலையப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணி. இவருக்கும் அதே பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.
இந்த நிலையில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியை மாவட்ட நிர்வாகம் திடீரென மாற்றம் செய்தது. இதை எதிர்த்து பள்ளி மாணவ மாணவிகள், காலாண்டு தேர்வை புறக்கணித்து திருச்சி-நாமக்கல் சாலையில் நேற்று மறியல் போராட்டம் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதித்தது.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாணவ மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.