வாடகை கட்டடத்தில் நெல்லை அண்ணா பல்கலை
நெல்லை: நெல்லை அண்ணா பல்கலைகழகம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தும் இன்னும் வாடகை கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. கட்டமைப்பு வசதிகளை செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.
நெல்லையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 44 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு செப். 17ம் தேதி இதன் துணை வேந்தராக காளியப்பன் நியமிக்கப்பட்டார். இவருக்கென நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியாக அலுவகம் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
எம்சிஏ, எம்பிஏ, எம்இ, எம்.டெக் (5 ஆண்டு) பிஎச்டி உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. பிஎச்டி படிப்புக்கு மட்டும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிற படிப்புகளில் அனைத்து பிரிவுகளும் பெரும்பாலும் சேர்க்கை முடிந்துவிட்டது. தற்போது 370 மாணவர்களுக்கு 28 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வகுப்பறைகள் புதிய பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில்தான் செயல்பட்டு வருகிறது. இதற்கு வாடகையாக ஆண்டுக்கு சுமார் ரூ.25 லட்சம் வரை செலவு செய்யப்படுவதாக தெரிகிறது. பல்கலைகழகம் கட்டுவதற்கான நில ஒதுக்கிடு, அலுவலக பணியாளர் நியமனம் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதில் இழுபறி நிலை நீடிக்கிறது.