ஆப்கான்: பாகிஸ்தானுக்கான புதிய தூதர் கடத்தல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான ஆப்கன் தூதர் அப்துல் காலிக் பராஹி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.
பாகிஸ்தானுக்கான ஆப்கன் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் அப்துல் காலிக் பராஹி. தற்போது பெஷாவரில் உள்ள ஆப்கன கவுன்சில் ஜெனரலாக உள்ளார். இவர் விரைவில் தூதர் பொறுப்பை ஏற்க இருந்தார்.
பெஷாவர் அருகே உள்ள ஹயதாபாத்தில் அவரது வீடு உள்ளது. அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி அப்துல் காலிக் நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று திடீரென்று காரை மடக்கியது. டிரைவரை சுட்டுக் கொன்றுவிட்டு, அப்துல் காலிக்கை அதே காரில் கடத்திச் சென்றது.
அப்துல் காலிக் கடத்தப்பட்டதை பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் தூதரக பொறுப்பு அதிகாரி மஜ்னூன் குலூப் உறுதி செய்தார்.
அவரை கடத்திச் சென்றது யார் என்பது இதுவரை தெரியவில்லை. எந்த தீவிரவாத அமைப்பும் இதுகுறித்து பொறுப்பேற்கவில்லை.
அப்துல் காலிக் கடத்தப்பட்டதற்கும், அவரது டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வெளியுறவு அமைச்சக அதிகாரி முகமது சாதிக் கூறுகையில், அப்துல் காலிக்கை பாதுகாப்புடன் விரைவில் மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஆப்கன் அரசுக்கும், அப்துல் காலிக் குடும்பத்தினருக்கும் உறுதி அளிப்பதாக கூறினார்.
தலிபான் தீவிரவாத அமைப்புகளுக்கு இடமளிப்பதாக பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் அப்துல் காலிக் கடத்தப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து பெஷாவர் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications