மதுரை இடைத்தேர்தல்-எதிர்த்து சிபிஎம் வழக்கு
மதுரை: மதுரை மாநகராட்சியின் 52வது வார்டு இடைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் வேட்பாளர் உதயசூரியன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை மாநகராட்சி தேர்தலில் 52வது வார்டில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினர்.
மாநகராட்சி துணை மேயர் மன்னன், கிழக்கு மண்டலத் தலைவர் குருசாமி ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் அரிவாள், கத்தி, இரும்பு கம்பிகள், உருட்டுக் கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு, எதிர்கட்சி ஏஜெண்டுகளை வெளியேற்றிவிட்டு கள்ள ஓட்டுகளை போட்டனர்.
எங்கள் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் மகாலிங்கத்தை துணை மேயர் மன்னன் கத்தியால் தாக்கி படுகாயப்படுத்தினார். எங்கள் கட்சியைச் சேர்ந்த முருகனை, திமுக கிழக்கு மண்டலத் தலைவர் குருசாமியும், எங்கள் கட்சியைச் சேர்ந்த ஆஞ்சி என்பவரை வடக்கு மண்டலத் தலைவர் இசக்கிமுத்துவும் தாக்கினர்.
கவுன்சிலர் லீலாவதியை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற மருது உள்ளிட்ட பலர் இத் தாக்குதலில் ஈடுபட்டனர். இது குறித்த புகார் தேர்தல் பார்வையாளர் கோபாலிடமும், மதுரை போலீஸ் கமிஷனர் நந்தபாலனிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
தேர்தல் ஆணையம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. எனவே, இந்த தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.