ஜார்க்கண்ட் ரயில் பாதையில் 14 வெடி குண்டுகள்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் சாஹேபான்ச் மாவட்டத்தில் ரயில் பாதையில் வெடிக்காத நிலையில் இருந்த 14 குண்டுகளை போலீஸார் தக்க சமயத்தில் கண்டுபிடித்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பாகல்பூர்- பர்ஹார்வா மார்க்கத்தில், தாலிஜாரி என்ற ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அப்போது அந்தப் பாதை வழியாக குவஹாத்தி - தாதர் எக்ஸ்பிரஸ் மற்றும் மால்டா - பிவானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லவிருந்தன. குண்டுகள் வெடித்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
பிளாஸ்டிக் பைகளில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை இவை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மக்களிடையே பீதியை ஏற்படுத்த விஷமிகள் இதைச் செய்திருப்பதாக கருதப்படுகிறது. தீவிரவாதிகள் இதன் பின்னணியில் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.