For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டுவெடிப்பு: சிமி, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் 5 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: டெல்லி, அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய தீவிரவாதிகள் 5 பேரை மும்பை குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்கள் சிமியில் இருந்து இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் இணைந்தவர்கள். தீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பை என்ற அதிர்ச்சியான தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூர், அகமதாபாத் அடுத்து டெல்லியில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தினர். இது தொடர்பாக டெல்லி போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் டெல்லி ஜாமியா நகரில் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் அதீப் உள்பட இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

போலீஸ் வேட்டையில் படுகாயம் அடைந்த முகமது சயிப் மற்றும் தப்பியோடிய ஸீஷான் ஆகிய தீவிரவாதிகளை போலீஸார் பிடித்தனர். அதைத் தொடர்ந்து தீவிராவாதிகள் ஜியா உர் ரகுமான், ஷகிர் நிஷார், முகமது ஷகில் பிடிபட்டனர்.

மணிபால் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மற்றொரு தீவிரவாதி நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பை குற்றப்பிரிவு போலீஸார் நேற்று நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் அப்துல் அப்ஸல் உஸ்மானி, முகமது ஷாதிக் ஷேக், முகமது ஆரிப் ஷேக், அகமது ஸாகிர் ஷேக், ஷேக் முகமது அன்சார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில், அகமதாபாத் மற்றும் டெல்லி தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களிலும், கடந்த 2005ம் ஆண்டு முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மும்பை குற்றப்பிரிவு போலீஸ் இணை கமிஷனர் ராகேஷ் மரியா கூறுகையில், தீவிரவாதி அப்துல் அப்ஸல் உஸ்மானி அகமதாபாத் குண்டுவெடிப்புக்காக நவி மும்பையில் இருந்து 4 வாகனங்களை திருடியுள்ளார். அகமதாபாத் அரசு மருத்துவமனையில் குண்டு வைத்ததும் இவர்தான்.

முகமது ஆரிப் ஷாயிக் டெல்லி குண்டு வெடிப்புக்குத் தேவையான வெடிகுண்டு சர்க்யூட்டுகளை தயாரித்துள்ளார். ஷாயிக் முகமது அன்சார் வெடிகுண்டுகளை இணைக்கும் வேலைகளை செய்துள்ளார். அன்ஸார் கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஆவார்.

இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவர்தான் முகமது ஷாதிக் ஷாயிக். உ.பி. மாநிலம் அஸம்கத் என்ற பகுதியில் உள்ள சஞ்சாபூர் கிராமத்தில் இருந்து இளைஞர்களை தீவிரவாதத்துக்கு இழுத்துள்ளார். டெல்லி, அகமதாபாத் குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டதும் இவர்தான்.

அடுத்த குறி மும்பை!

இவர்களின் அடுத்த குறி மும்பை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்த இந்த கும்பல் சதி திட்டம் தீட்டியுள்ளது.

இவர்களில் 3 பேர் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹூஜி போன்ற பெரிய தீவிரவாத அமைப்புகளில் பயிற்சி பெற்றுள்ளனர்.

தடை செய்யப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த இந்த 5 பேரும், பின்னர் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் இணைந்துள்ளனர். இந்த அமைப்பின் நிறுவனர் ரோஷன் கான் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.

கைதானவர்களிடம் இருந்து 10 கிலோ அம்மோனியம் நைட்ரேட், நான்கு எலக்ட்ரிக் சர்க்யூட்டுகள், இயந்திர மற்றும் கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X