கெளரவ 'லெப்டினன்ட் கர்னல்' ஆனார் கபில்தேவ்!
இந்திய ராணுவத்தின் பஞ்சாப் பிரிவு டெரிடோரியல் ஆர்மியில் இணைந்துள்ளார் கபில் தேவ். ராணுவத்தின் பால் ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு கெளரவ லெப்டினென்ட் கர்னல் அந்தஸ்து அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர், கபில்தேவுக்கு லெப்டினெனன்ட் கர்னல் அந்தஸ்தை அளிக்கும் பதக்கத்தை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் கபில்தேவ் ராணுவ சீருடையுடன் படு மிடுக்காக காணப்பட்டார். ராணுவ வீரருக்கே உரிய கம்பீரத்தை கபில்தேவ் முகத்தில் காண முடிந்தது.
மேலும் ராணுவத் தளபதி தீபக் கபூர், ராணுவ அதிகாரிகள் அளிப்பதைப் போலவே மிடுக்கான சல்யூட்டையும் வைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் கபில் பேசுகையில், ராணுவ சீருடையுடன் நின்றிருப்பதை மிகப் பெருமையாக கருதுகிறேன். இந்த சீருடையுடன் என்னால் நாட்டுக்கு செய்ய முடிகிற அனைத்தையும் செய்ய ஆர்வத்துடன் உள்ளேன். இந்த நிமிடம், எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும் என்றார்.
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு தலைவராக இருக்கும் வெங் சர்க்கார் ராணுவத்தில் கர்னலாக இருந்தவர். இப்போது கிரிக்கெட் வாரியத்திற்குப் போட்டியாக இருக்கும் இந்தியன் கிரிக்கெட் லீக்கின் தலைவரான கபில் தேவ் லெப்டினென்ட் கர்னலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.