அண்ணாவின் வார்த்தைகளை கருணாநிதி ஏற்க வேண்டும்: ராமதாஸ்
செஞ்சி: மது விலக்கு போராட்டம் நடத்துவோம். சட்டத்தை மீறுவோம். சிறை செல்வோம் என்று கூறிய அண்ணாவின் வார்த்தைகளை அவரது தம்பி கருணாநிதி ஏற்று நல்ல முடிவை தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
செஞ்சியில் நடந்த பாட்டாளி மகளிர் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், தமிழகத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை குடிக்கும் பழக்கும் அதிகரித்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் குடிக்காதவர்களே இல்லை என்ற அவல நிலை உருவாகும். சமுதாயம் அழிவை நோக்கி செல்வது வேதனையாக இருக்கிறது.
வருமானத்தை எதிர்பார்க்காமல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சிகள் நடந்து வருகிறது.
இவர்களது வழிகாட்டியான அண்ணா, கடந்த 1968ல் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நடந்த அகில இந்திய பொது மதுவிலக்கு மாநாட்டில் பேசும்போது, மது விலக்கு தோல்வியடைந்து விட்டதாக சிலர் கூறுகின்றனர். சமூக பொருளாதாரத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது அதற்கு பின்னால் தாய்மார்கள், குழந்தைகள் அழுகிற காட்சிதான் என் கண் முன் நிற்கிறது.
நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று மது விலக்கு போராட்டம் நடத்துவோம். சட்டத்தை மீறுவோம். சிறை செல்வோம் என்றார்.
அண்ணாவின் தம்பி கருணாநிதி, அந்த நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். கள்ளுக் கடைகள் கூடாது என்று பெரியார் தனது தோட்டத்தில் இருந்து 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.
நாகம்மை, பெரியாரின் தங்கை கண்ணம்மா ஆகியோரின் தலைமையில் மகளிர் போராட்டம் நடந்தது. 1971ல் மதுக்கடைகளை திறந்துவிட்டார்கள். இப்போது மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications