போபால் வாலிபரின் ஒரு கை ஓசை சாதனை!
போபால்: ஒரு கையால் ஓசை எழுப்ப முடியுமா?. எழுப்ப முடியும் என்பதை நிரூபித்து சாதனை படைத்துள்ளார் போபாலைச் சேர்ந்த ஒரு வாலிபர்.
இரு கைகளும் சேர்ந்தால்தான் சத்தம் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது என்பதும் தெரியும். ஆனால் ஒரு கையால் ஓசை எழுப்பி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் போபாலைச் சேர்ந்த நவேத் கான் என்பவர்.
போபாலில் பத்திரிக்கையாளர்கள் முன்பு இந்த சாதனையை அவர் செய்து காட்டினார். ஒரு முறை, இருமுறை அல்ல, பலமுறை.
சமீபத்தில் சென்னையில் நடந்த சாலஞ்சர் அகாடமி நடத்திய உலகக் கோப்பை போட்டியிலும் இவர் பங்கேற்று ஒரு கையால் ஓசை எழுப்பி வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், ஒரு கையால் 310 முறை ஓசை எழுப்பி உலக சாதனை படைத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். இதற்கு முன்பு ஹிஸ்ஸாரைச் சேர்ந்த நவ்நீத் சிங் என்பவர் 284 முறை ஒரு கை ஓசை எழுப்பியதே உலக சாதனையாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கை ஓசை மட்டுமல்ல, வாயால் கங்காரு போல சத்தம் கொடுப்பதிலும் எக்ஸ்பர்ட்டாம் நவேத் கான்.