முதல்வர் விழாவிலேயே மின் தடை - 3 அதிகாரிகள் இடமாற்றம்!
திருச்சி: திருச்சியில் கடந்த 21ம் தேதி அன்று கலைஞர் அறிவாலயம் திறக்கப்பட்ட விழாவின்போது மின் தடை ஏற்பட்டது தொடர்பாக 3 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அன்று நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு கலைஞர் அறிவாலயத்தைத் திறந்து வைத்தார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக மின்சாராத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பேச்சுப் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருந்த போது எதிர்பாராதவிதமாக திடீரென மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் விழாவில் கலந்து கொண்டவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு உடனே சரி செய்யப்பட்டது.
முதல்வர் விழாவிலயே மின் தடை ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மின் தடைக்கு காரணமாக இருந்த கோட்ட பொறியாளர், விருத்தாசலம் கூடுதல் கோட்ட பொறியாளர், விருத்தாசலம் உதவி பொறியாளர் ஆகிய மூன்று மின் வாரிய அதிகாரிகள் திருச்சியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.