வடிவேலுவையே சிரிக்க வைத்த விஜயகாந்த்: சந்திரசேகர் நக்கல்
சென்னை: எல்லோரையும் சிரிக்க வைப்பவர் வடிவேலு. ஆனால் தனது பேச்சு மற்றும் செயலால் வடிவேலுவையே சிரிக்க வைத்து விட்டார் விஜயகாந்த் என நக்கலடித்துள்ளார் திமுகவைச் சேர்ந்த நடிகர் சந்திரசேகர்.
விஜயகாந்த் - வடிவேலு விவகாரம் குறித்து சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகம் எனும் பூமிப் பந்தில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை உயிரினங்கள் வாழ்வதற்கு முழு முதற் காரணம் வெப்பம் - சூடு - அதைத் தருவது சூரியன். அதன் மகத்தான சக்தி இந்த பிரபஞ்சத்தையே ஆட்கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. அது நல்லவன், கெட்டவன் என பார்க்காது. வேண்டியவன், வேண்டாதவன் பார்க்காது.
அதைப் போல முதல்வர் கருணாநிதி, இந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு தன் வாழ்வையே அர்பப்ணித்து உழைத்துக் கொண்டிருப்பவர். மனித சூரியனாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
நடிகர் வடிவேல், வீடும், அலுவலகமும் தாக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதும், அவரது கட்சியினர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு விஜயகாந்த், ஆளும் கட்சியினரின் தூண்டுதல்தான் காரணம் என மீண்டும் சூரியனைப் பார்த்து கர்ஜிக்கிறார்.
இவரின் இந்த அறிக்கை இவருடைய பொது வாழ்க்கை மகுடத்தில் பதிக்கப்பட்ட மற்றொரு கூழாங்கல் என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன்.
தமிழக மக்களையெல்லாம் கவலையை மறந்து சிரிக்க வைக்கும் ஆற்றல் பெற்றவர் வடிவேலு. அப்படிப்பட்ட வடிவேலுவையே சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகராய் விளங்கும் விஜயகாந்த்தை மக்கள் ஏற இறங்கப் பார்க்கிறார்கள்.
நண்பா, உன் கோமாளிக் கூத்தைப் பார்த்து மக்கள் வடிவேலுவின் திரைப்படப் பாணியில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா. ஸஸ் அப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே.
மற்றொரு வசனம், விஜயகாந்த்துக்கு நாகரீகப் பண்பு இதெல்லாம் வருமா, வராதா.
முதல்வர் பெயரைச் சொல்ல உங்களுக்கு தகுதி உள்ளதா என்பதையும் வடிவேலு பாணியில் சொல்கிறேன் ரூம் போட்டு யோசி என்று கூறியுள்ளார் சந்திரசேகர்.