கணவர் வீடு சென்ற புதுமணப் பெண் மாயம்
கடையநல்லூர்: கணவன் வீட்டுக்கு புறப்பட்ட புதுமணப்பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் டீக்கடை நடத்தி வருபவர் மாரியப்பன். இவருக்கும் மேலக்கடையநல்லூர் பஜனை மடம் தென்வடல் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் பேச்சியம்மாள் என்ற பிரேமா என்பவருக்கும் கடந்த ஒன்றாம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி மாரியப்பன் தனது மனைவியுடன் கடையநல்லூர் வந்துள்ளார். அப்போது பிரேமாவிற்கு உடல்நலம் சரியில்லாததால் அவரை கடையநல்லூரில் தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு வாசுதேவநல்லூருக்கு திரும்பிவிட்டார்.
இதனையடுத்து கண்வலியால் அவதிப்பட்டு வந்த பிரேமாவை தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்து மறுநாள் அவரை தனியாக வாசுதேவநல்லூருக்கு பஸ்சில் அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
ஆனால் பிரேமா கணவன் வீட்டிற்கு இதுவரை வந்து சேரவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் மாரியப்பனும் பிரேமாவின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பிரேமாவின் தந்தை ஆறுமுகம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
காணாமல் போன அன்று பிரேமா 10 பவுன் நகை அணிந்திருந்தார். நகைக்கு ஆசைப்பட்டு அவர் கடத்தப்பட்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். புது மணப்பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.