விடிவதற்குள் கைமாறிய வாஷிங்டன் மியூச்சுவல்!
நியூயார்க்: பிரபல வாஷிங்டன் மியூச்சுவல் நிறுவனத்தை அமெரிக்க அரசு நேற்று அதிரடியாக மூடியது. அதன் 1.9 பில்லியன் டாலர் சொத்துக்களை ஜேஎம் மார்கன் சேஸ் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது அமெரிக்கா.
கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க வங்கித் துறையைச் சீரமைக்கும் நடவடிக்கையாக இதைச் செய்துள்ளது அமெரிக்கா.
வாஷிங்டன் மியூச்சுவல் ஏற்கெனவே 16.7 பில்லியன் டாலர் கடனில் சிக்கித் தவித்தது. ஆனால் இந்நிறுவனத்துக்கு 307 பில்லியன் டாலர் சொத்துக்களும், 188 பில்லியன் டாலர் வைப்புத் தொகையும் உள்ளது.
விடிவதற்குள் மாறிய தலைவிதி!:
ஆனால் நிறுவனத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்ற பேச்சு கிளம்பியதால் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புத் தொகையை முழுமையாக திரும்பப் பெறுவதில் ஆர்வம் காட்டினர். இதனால் வங்கி தடுமாறிக் கொண்டிருந்தது.
யாருமே எதிர்பாராத ஒரு நேரத்தில், வெள்ளிக்கிழமை (நேற்று) காலைப் பொழுது விடிவதற்குள் வாஷிங்டன் மியூச்சுவல் கைமாறிவிட்டது.
வாஷிங்டன் மியூச்சுவலை அதன் தலைமை நிர்வாகிக்குக் கூட சொல்லாமல், ஜேஎம் மார்கன் சேஸ் நிறுவனத்திடம் அமெரிக்க அரசு விற்றுவிட்டது.
இதற்கு ஒருநாள் முன்புதான் அதிபர் ஜார்ஜ் புஷ், அதிபர் பதவிக்கான வேட்பாளர்கள் மெக்கெயின் மற்றும் ஒபாமாவுடன் நாட்டின் நிதி நெருக்கடி குறித்து பேச்சு நடத்தியிருந்தார்.
அப்போது எடுக்கப்பட்ட அதிரடி முடிவுகளுள் ஒன்றுதான் வாஷிங்டன் மியூச்சுவல் பண்டை மார்கன் கைக்கு மாற்றியது என்கிறார்கள்.
கடந்த மார்ச் மாதம் இதே போலத்தான் பியர் ஸ்டீம் நிறுவனத்தை வாங்கியது மார்கன் வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வாஷிங்டன் மியூச்சுவல் பண்டை வாங்கியதன் மூலம் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வங்கியாக உயர்ந்துள்ளது ஜேஎம் மார்கன் சேஸ்.