என்.கே.கே.பி. ராஜா ஆள் கடத்தல் வழக்கு: 4 பேர் கைது
ஈரோடு: ஆள் கடத்தல் வழக்கில், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் ஆதரவாளர்கள் 3 பேர் உள்பட நான்கு பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் உள்ளது கல்லாங்குத்து தோட்டம். இங்கு வசிப்பவர் பழனிச்சாமி. விவசாயி. இவரது மனைவி மலர்விழி, மகன் சிவபாலன், தம்பி குகமணி ஆகியோரை முன்னாள் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் தூண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் கடத்தி சென்றதோடு, அவர்களது வீடுகளையும் தரைமட்டமாக்கியதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் ராஜா அமைச்சர் பதவியை இழந்தார்.
இந்த நிலையில் பழனிச்சாமியின் தந்தை சின்னசாமி இறந்து போனதற்கு காரணமாக இருந்ததாக முன்னாள் அமைச்சர் ராஜா உள்பட அவரது ஆதரவாளர்கள் சுமார் 20 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதன் பேரில் சிபிசிஐடி எஸ்பி அருண் தலைமையிலான தனிப்படை செப்டம்பர் 21 ம் தேதி முதல் பெருந்துறையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையைத் தொடர்ந்து, பெருந்துறை நகர திமுக செயலாளர் கோபிநாத், ஈரோடு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பவானி ரெங்கசாமி, ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மற்றும் பெருந்துறையை சேர்ந்த பாலாஜி ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இவர்களை பெருந்துறை மாஜிஸ்திரேட் நீதிபதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
--












Click it and Unblock the Notifications