கிடுகிடு சரிவில் வாக்கோவியா கார்ப் வங்கி!
தனது பங்குகளின் விலஸை அதலபாதாளத்துக்கு சரிந்த்தைத் தொடர்ந்து அவற்றை வாங்கிக் கொள்ளுமாறு போட்டியாளர்களான சிட்டி குரூப், வெல்ஸ் பர்கோ உள்ளிட்டவர்களிடம் சரணடைந்துள்ளது வாக்கோவியா.
அதிக சொத்துக்களைக் கொண்ட அமெரிக்க வங்கிகளில் 6-வது இடத்திலிருக்கிறது வாக்கோவியா கார்ப்.
ஆனால் தற்போதை பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத அளவுக்கு கடன் சுமை இந்த வங்கியை அழுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் இந்த வங்கியின் பங்கு விலை கிடுகிடுவென சரிய ஆரம்பித்தது. வெள்ளிக்கிழமை மட்டும் 27 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது வாக்கோவியாவின் பங்குகளில்.
இனியும் தாங்க முடியாது என்பதால் உடனடியாக தனது பங்குகளை வாங்கிக் கொள்ளுமாறு போட்டி வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்தது வாக்கோவியா. இல்லாவிட்டால் வாஷிங்டன் மியூச்சுவலுக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் நேரலாம் என்பதாலேயே, சாட்சிக்காரனிடம் போவதற்கு பதில் சண்டைக்கார்ர்களிடமே சரணடைந்துவிட்டது.
இதைத் தொடர்ந்து வாக்கோவியா வங்கி நிர்வாகிகளுடன் கடந்த மூன்று தினங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன சிட்டி குரூப், வெல்ஸ் பர்கோ மற்றும் சில வங்கிகள்.
கடந்த வெள்ளிக்கிழமை வாக்கோவியாவின் பங்கு மதிப்பு வெறும் 10 டாலர்கள்தான். இதற்கு மேல் ஓரிரு டாலர்கள் மட்டுமே தங்களால் கொடுக்க முடியும் என சிட்டி வங்கி தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.
வாக்கோவியா தனது மொத்த பங்குகளையும் விற்கப் போகிறதா அல்லது குறிப்பிட்ட சதவிகிதத்தை மட்டும் விற்கப் போகிறதா என இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் வாக்கோவியா வங்கி சொத்துக்கள் சிலவற்றுக்கு பிணையமளிக்க அமெரிக்க நிதித்துறை முன்வந்துள்ளது. முன்பு பியர் ஸ்டெர்ன் வங்கி ஜேபி மார்கன் சேஸுக்கு விற்கப்பட்ட போதும் இதேபோன்ற நடவடிக்கையை அமெரிக்க நிதித்துறை மேற்கொண்டது நினைவிருக்கலாம்.
லேட்டஸ்ட் தகவல்களின்படி, வெல்ஸ் பர்கோ நிறுவனம் வாக்கோவியாவை வாங்கக் கூடும் என்று தெரிகிறது.