அதிமுகவில் இணைந்த சிபிஐ தொண்டர்கள்-மோதல்
கடையநல்லூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 பேர் அதிமுகவில் இணைந்தனர். இதையடுத்து இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அடிதடியில் முடிந்தது.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி கீழ ஆம்பூர் மஞ்சப்புளி கிராமத்தை சேர்ந்த 10 பேர் இந்திய கம்யூ. கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.
இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்நிலையில் புதிதாக கட்சியில் சேர்ந்தவர்கள் மஞ்சப்புளி கிராமத்தில் அதிமுக கொடியேற்றுவதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தபோது இந்திய கம்யூ கட்சியை சேர்ந்த சிலர் அதிமுகவினரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த இசக்கிமுத்து, பார்வதி உள்பட 40 பேர் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து அம்பை டிஎஸ்பி ராஜமோகன் மஞ்சப்புளி கிராமத்தில் தடை உத்தரவை பிறப்பித்தார். பின்னர் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
இதில் அம்பை தாசில்தார் காதர் அவுலியா, டிஎஸ்பி ராஜமோகன் மற்றும் இந்திய கம்யூ. கட்சி மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
அப்போது தொடர்ந்து இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து இரு பிரிவினரும் சமாதானமாக செல்வதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில் நேற்று அதிமுகவை சேர்ந்த கணபதி என்பவர் மஞ்சப்புளி கிராம குளக்கரையில் நடந்து வந்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இந்திய கம்யூ, கட்சியை சேர்ந்த அவரது தம்பி தளவாய் பைக்கால் கணபதியை இடித்தார்.
இதில் படுகாயமடைந்த அவர் அம்பை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கணபதி மகன்கள் தளவாயை சாரமரியாக தாக்கினர். அவரது பைக்கையும் உடைத்தனர். இதையடுத்து அங்கு திரண்டு 2 கும்பல்களும் சராமரி கல்வீச்சில் ஈடுபட்டது. இதில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications