கூட்டணி: விஜயகாந்த்தை சந்திப்பேன்-தா.பாண்டியன்
தஞ்சாவூர்: தேமுதிகவுடன் தேர்தல் கூட்டணி வைப்பது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துடன் பேசிய பின்பு முடிவு செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
தஞ்சை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அக்டோபர் 2ம் தேதி சென்னையிலும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இலங்கை தமிழரின் உயிர் பாதுகாப்பு, உரிமைப் பாதுகாப்பு கோரிக்கையை முன்வைத்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது.
இலங்கை அரசு, வன்முறையில் ஈடுபட்டு தமிழ் இன மக்களை கொன்று தீர்க்க முயற்சி செய்கிறது. இலங்கை அரசு தமிழ் இனத்தையே அழிக்கும் செயலில் இறங்கி உள்ளது. எனவே, உடனே போரை நிறுத்தி, அரசியல் தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை இந்திய அரசு இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ உதவி, பொருளுதவி செய்யக் கூடாது.
இலங்கையில் அகதிகளாக உள்ள 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களுக்கு இந்திய அரசு நேரடியாகவோ, செஞ்சிலுவை மூலமாகவோ உணவு, உடை, மருந்து ஆகியவற்றை உடனே அனுப்ப வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், விஜயகாந்த்தை சந்தித்துள்ளனர். நாங்களும் விஜயகாந்துடன் சந்தித்து பேசிய பின்பு இறுதி முடிவை இரு கட்சிகளும் இணைந்து எடுப்போம் என்றார்.