ஈழத் தமிழர்கள்: இ. கம்யூனிஸ்டுக்கு ஜெ ஆதரவு
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மாநில செயலாளர் தா.பாண்டியனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.
சமீப காலமாக தமிழக அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றத்தின் ஒரு பகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்ைகயைக் கண்டித்து சிபிஐ சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:
இலங்கைத் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வலியுறுத்தியும், இலங்கைத் தமிழ் மக்களின் உயிர், உடமை மற்றும் உரிமைகளைப் பாதுகாத்திட வலியுறுத்தியும், தங்கள் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2008 வியாழக்கிழமை அன்று மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ள தகவலை எனக்கு தெரிவித்துள்ளீர்கள்.
அன்றைய தினம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என்றும், அதேபோல் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பங்கேற்று வாழ்த்துரை வழங்க வேண்டும் என்றும் தாங்கள் அழைத்தமைக்கு முதற்கண் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அன்றைய தினம் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ளேன். அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நிலையில் 02.10.2008 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான திரு.சு.முத்துசாமி அவர்கள் கலந்து கொள்வார்.
மேலும், தாங்கள் கேட்டுக்கொண்டது போல், மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்வார்கள்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினைகளை முன்வைத்து தங்கள் கட்சியின் சார்பில் நடத்தப்படவுள்ள உண்ணாவிரதப் போராட்டங்கள் வெற்றிபெற எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
அதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணக்கமான நிலைக்கு வந்துள்ளதையே இந்த கடிதம் தெளிவாக்குகிறது.