அகற்றப்பட்டது அனுமன் சிலை-சென்னை பயணம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அனுமன் சிலையை அதை நிறுவிய அமைப்பே அகற்றி விட்டது. அந்த சிலையை சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனராம்.
கன்னியாகுமரியில், சூரிய மறைவைக் காணும் பகுதியில் (சன் செட் பாயிண்ட்), 24 அடி உயர பிரமாண்ட அனுமன் சிலை நிறுவப்பட்டது. சைதன்ய மகா பிரபு நாம பிக்சா கேந்திரா என்ற அமைப்பு சில நாட்களுக்கு முன்பு இந்த சிலையை நிறுவியது.
இதற்கு புதுக்கிராமம், கோவளம், வாவத்துறை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கோவளம் பஞ்சாயத்து கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. அப்போது சிலை இடம் பெற்றுள்ள பூங்காவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ஆட்சித் தலைவர் ஜோதி நிர்மலாவை சந்தித்த பஞ்சாயத்து உறுப்பினர்கள், சிலையை அகற்ற வேண்டும் என கோரி மனு கொடுத்தனர். இதுகுறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
அதிகாரிகளும் விசாரணை நடத்தி ஆட்சியரிடம் அறிக்கை வழங்கினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் அனுமன் சிலை உள்ள பகுதிக்கு ஜேசிபி இயந்திரங்களுடன் அதிகாரிகளும், போலீஸாரும் வந்தனர்.
இத்தகவல் பரவியதும், அனுமன் சிலையை அகற்றப் போகிறார்கள் என்று கூறி இந்து அமைப்பினர் திரண்டு வந்தனர். சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களுடன் திரும்பிச் சென்று விட்டனர். இருப்பினும் எந்த நேரத்திலும் அதிகாரிகள் சிலையை அகற்றலாம் என்பதால் இந்து அமைப்பினர்அங்கேயே முகாமிட்டு கண்காணித்து வந்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவியது.
இந்த நிலையில் சிலையை அகற்ற அதை நிறுவியவர்களே முடிவு செய்தனர். இதையடுத்து இன்று அதிகாலையில் அனுமன் சிலை அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு நெல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து சிலையை வைத்த அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான சீனிவாசன் கூறுகையில், இந்த சிலையை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார். அதை ஏற்று நாங்களே சிலையை அகற்றி விட்டோம் என்றார்.
நெல்லை கொண்டு செல்லப்பட்ட அனுமன் சிலையை சென்னைக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனராம்.
இராம.கோபாலன் கண்டனம்
இந்த சிலை அகற்றத்துக்கு இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரியில் தனியார் பட்டா நிலத்தில், சொந்த பூங்காவில் சிலர் ஆஞ்சநேயர் சிலையை நிறுவினார்கள். அதை எடுக்கச் சொல்லி சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி இன்று அதிகாலை 5.30 மணிக்கு அரசு அதிகாரிகள் அகற்றி விட்டார்கள். இது வழிபாட்டுத் தலம் அல்ல என்று அறிவிப்பு பலகையும் வைத்திருக்கிறார்கள்.
'கன்னிமேரி' மாவட்டமாக்க முயற்சி:
கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக மாற்ற கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி நடைபெற்று வருகிறது. அமரர் தாணு லிங்க நாடார் தலைமை ஏற்று இதை தடுத்து நிறுத்தினார்.
மக்களை மிரட்டி பணியவைத்து ஆஞ்சநேயர் சிலை அகற்றப்பட்ட செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசின் இச்செயலை இந்துக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.