இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களில் போலீஸார் திடீர் சோதனை
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் நேற்று போலீஸார் திடீர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து முக்கிய நபர் ஒருவர் ஊடுறுவியுள்ளதாக வந்த தகவலின் பேரில் இந்த சோதனை நடந்தது.
தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இலங்கையிலிருந்து அகதிகளுடன் வரும் போராளிகளை அடைப்பதற்காக செங்கல்பட்டில் விசேஷ முகாம் உள்ளது. இதுதவிர மண்டபம் அகதிகள் முகாம்தான் முக்கிய முகாமாகும்.
அகதிகள் முகாம்களில் அவ்வப்போது கண்காணிப்பு மற்றும் சோதனை நடைபெறுவது வழக்கம். அப்போது குறிப்பிட்ட முகாம்களில் இவை நடக்கும். ஆனால் நேற்று அனைத்து அகதிகள் முகாம்களிலும் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
அகதிகள் முகாம்களில் அனைவரும் தங்கியுள்ளனரா, புதியவர்கள் யாரேனும் வந்துள்ளார்களா, யாரேனும் காணாமல் போயுள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து முக்கிய நபர் ஒருவர் முகாம் ஒன்றில் ஊடுறுவியிருப்பதாக மத்திய உளவுத்துறை தந்த தகவலைத் தொடர்ந்தே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.