புஷ்ஷின் 700 பில்லியன் உதவி திட்டம்-யுஎஸ் நாடாளுமன்றம் நிராகரிப்பு:பெரும் தடுமாற்றத்தில் உலகசந்தைகள்
வாஷிங்டன்: மூழ்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க தனியார் நிதி அமைப்புகள், வங்கிகளைக் காப்பாற்ற 700 பில்லியன் டாலர் (சுமார் 28 லட்சம் கோடி ரூபாய்) நிதியுதவி வழங்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் திட்டத்தை அந் நாட்டு நாடாளுமன்றம் ஏற்கவி்ல்லை.
இது தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோற்றகடிக்கப்பட்டுவிட்டது. இதனால் அமெரிக்க நிதி சந்தையில் பெரும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் பரவியது.
இதைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தையான டெள ஜோன்ஸ் 778 புள்ளிகள் அளவுக்கு வீழந்தது. சரித்திரத்திலேயே இந்த அளவுக்கு அமெரிக்க பங்குச் சந்தையில் ஒரே நாளில் வீழ்ச்சி ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகளிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்திய பங்குச் சந்தைகளான என்எஸ்சியிலும் பிஎஸ்இயிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள்ளது. அதே நேரத்தில் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அங்கு முடக்கப்பட்டுள்ள தங்களது பணத்தை முதலீட்டாளர்கள் தங்கத்தில் போடலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலையை புரோக்கர்கள் கூட்டி விட்டுள்ளனர்.
1930களில் அமெரிக்காவில் நிலவிய மாபெரும் பொருளாதார மந்தநிலையின் போது அரசு நிதியுதவி செய்து பல நிதி அமைப்புகளை காப்பாற்றியது.
அதன் பின்னர் மிகப் பெரிய அளவில் அரசு தலையிட்டு காப்பாற்ற முயன்றது இது இரண்டாவது முறையாகும். ஆனால், பொது மக்களின் பணத்தைக் கொண்டு தனியார் நிதி அமைப்புகளையும் தனியார் வங்கிகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை என அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெரும்பாலான எம்பி்க்கள் கருதுகின்றனர்.
இதையடுத்து அதிபர் புஷ்ஷின் 700 பில்லியன் டாலர் உதவித் திட்டத்தை அவர்கள் தோற்கடித்துவிட்டனர்.
இதையடுத்து மீண்டும் வரும் வியாழக்கிழமை இந்தத் தீர்மானத்தி் மீது மறு ஓட்டெடுப்பு நடத்த அதிபர் புஷ் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி:
இந் நிலையில் டாலருக்கு எதிரான இந்திய கரன்சியின் மதிப்பு ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு திடீரென பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வாரத்தில் ஒரு டாலருக்கு 46.54 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு, நேற்று திடீரென 47.11 ஆனது.