தேமுதிக மா. செயலாளர்- பொருளாளர் அடிதடி!
கரூர்: தேமுதிக கரூர் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணனும், மாவட்டப் பொருளாளர் சங்கரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தேமுதிக கரூர் மாவட்ட செயலாளர் என்.எஸ். கிருண்ணன் செல்பாடுகள் தன்னிச்சையாகவும், பணம் பறிக்கும் நோக்கில் உள்ளதாகவும் கூறி அக் கட்சியில் உள்ள சிலர் சங்கரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சனை குறித்து சங்கர் மாவட்டச் செயலாளர் என்.எஸ். கிருஷ்ணன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனால் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், தேமுதிக மாவட்ட அலுவலகம் உள்ள கோவை ரோட்டில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் மாவட்ட பொருளாளர் சங்கர் கட்சியின் விதிகளுக்கு முரணாகவும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராமுவசந்தன் அறிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சங்கர் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் ஈரோடு சந்திரகுமாருக்கு மச்சினன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், மாவட்ட பொருளாளர் சங்கர், மற்றும் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் சிலர் மாற்றுக் கட்சிக்கு தாவும் நிலைப்பாடு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.