தங்கக் காசு மோசடி-தலைமறைவு தொழிலதிபர் கைது
சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் காசு மோசடியில் தலைமறைவாக இருந்து வந்த பெரோஸ் கான் என்கிற தொழிலதிபர் கைதாகியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் கோல்டு குவெஸ்ட் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் எம்.எல்.எம். பாணியில், தங்கக் காசு திட்டத்தை அறிவித்து ஆயிரக்கணக்கானவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து புகார்கள் குவியவே, நிறுவனத்தின் நிர்வாகி புஷ்பம் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். நிறுவனத்தின் ரூ.180 கோடி சொத்துக்களும் முடக்கப்பட்டது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட புஷ்பம் சமீபத்தில் விடுதலையானார். மற்றவர்களும் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளனர்.
நிறுவனத்தின் ஏஜென்டாக செயல்பட்டு பலரை சேர்த்து விட்ட பத்மா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய பெரோஸ்கான் என்கிற தொழிலதிபர் நான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்தது வந்தார். அவர் தற்போது சிக்கியுள்ளார்.
கூடுதல் எஸ்.பி. சந்திரபாசு தலைமையிலான தனிப்படை போலீஸார் அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அவர்களது பொறியில் சிக்கிய பெரோஸ்கான் அடையாறில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீ சார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அவர், தங்ககாசு மோசடியில் ரூ.20 கோடிக்கு மேல் கமிஷனாக சுருட்டி இருப்பதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பெரோஸ்கானுக்கு மைலாப்பூரில் ஏஞ்சல் என்ற பெயரில் ஜவுளிக்கடை உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் பண்ணை வீடும் உள்ளது. இந்த சொத்துக்கள் அனைத்தும் தங்க காசு மோசடி மூலம் வாங்கி குவித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கோடிக்கணக்கான சொத்துக் களை போலீசார் முடக்கி உள்ளனர். வீட்டில் நின்ற சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications