மதுரை தேர்தல் முடிவு-வெளியிட தடை நீட்டிப்பு
மதுரை: மதுரை 52வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்ற கிளை நீட்டித்துள்ளது.
மதுரை மதுரை மாநகராட்சியின் 52வது வார்டு இடைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உதயசூரியன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், மதுரை மாநகராட்சி தேர்தலில் 52வது வார்டில் நடைபெற்ற தேர்தலின் போது திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினர். திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இது குறித்த புகார் தேர்தல் பார்வையாளர் கோபாலிடமும், மதுரை போலீஸ் கமிஷனர் நந்தபாலனிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை தேர்தல் ஆணையம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. எனவே, இந்த தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதேபோல அதிமுக தரப்பிலும் தேர்தல் வன்முறை குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கண்ணன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணை வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். அதன் பேரில் இம்மாதம் 20ம் தேதிக்கு நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தனர். அத்துடன் இடைத்தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.