For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழல்: தலை திருப்பிய அரசியல்வாதிகள்-கலாம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஊழல் ஒழிப்பு குறித்த சிறுமியின் கேள்விக்கு பதிலளிக்கும்படி நான் கூறியபோது மேடையில் இருந்த அரசியல்வாதிகளை முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர் என்றார் அப்துல் கலாம்.

சென்னை சர்ச் பார்க் பள்ளி வளாகத்தில் உள்ள சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியின் நூற்றாண்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நூற்றாண்டு விழா கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசியதாவது:

ஆசிரியர்களும், கல்வி கற்பிப்போரும் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். கணித மேதை ராமானுஜம், பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதத்தை தவிர அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்தார். பள்ளிக்கூடத்தில் அவர் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், 17 வயதில் கணிதத்தில் சர்வ வல்லமை பெற்றிருந்தார்.

அவரது திறமையை கண்ட ஆங்கிலேய அதிகாரி, இங்கிலாந்தில் உள்ள ஹார்டி என்ற மேதையிடம் அனுப்பி வைத்தார். ராமானுஜத்தை வெளியுலகுக்கு அடையாளம் காட்டியவர் ஹார்டிதான்.

இதுபோல், ஒரு மாணவர் பல பாடத்தில் தோல்வியுற்றாலும், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் சிறப்பாக இருந்தால் அவரை பாராட்டுங்கள்.

3 ஆண்டுகளுக்கு முன்பு, ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது 10ம் வகுப்பு படிக்கும் பவானி என்ற மாணவிது, ''நான் ஊழல் இல்லாத இந்தியாவில் வசிக்க விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்'' என்று கேட்டாள்.

அதற்கு, மேடையில் இருந்த அரசியல்வாதிகளை பார்த்து, சிறுமியின் கேள்விக்கு பதிலளிக்கும்படி கூறினேன். ஆனால் அவர்கள் உடனே முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர்.

நான் அங்கிருந்த மாணவர்களை பார்த்து, உங்கள் தாய், தந்தையர் லஞ்சம் வாங்காதவர்களா? என்று கேளுங்கள் என்றேன்.

அங்கிருந்த தாய்மார்களை பார்த்து, உங்கள் குழந்தைகள் லஞ்சம் வாங்குவதை விட்டுவிட சொன்னால் விட்டுவிடுவீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், குழந்தைகள் எங்களை இந்த கேள்வி கேட்டால் அது எங்களுக்கு அவமானம். எனவே, லஞ்சம் வாங்க மாட்டோம் என்று உறுதியுடன் கூறினர்.

ஒவ்வொரு மாணவியும், பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உதவி செய்வேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டுவேன், வரதட்சணையை ஒழிக்க தீவிரமாக பாடுபடுவேன், பெண்சிசுக் கொலையை ஒழிக்க உறுதி பூணுவேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

நாளை தஞ்சை பயணம்:

இதற்கிடையே நாளை அப்துல் கலாம் தஞ்சாவூர் வருகிறார்.

தஞ்சாவூரையடுத்த திருமலை சமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 25ம் ஆண்டு தொடக்க விழாவும், ஆய்வு மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழாவும் நாளை நடைபெறுகிறது.

இந்த விழாவில் அப்துல் கலாம் கலந்து கொள்கிறார். கிராமப்புறங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ள மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை நாளை கலாம் முன்னிலையில் சமர்பிக்கின்றனர்.

அடுத்து, வல்லம் அருகே உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தொழில்நுட்ப கருத்தரங்கு காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X