3 பேர்... 97 பேராக மாறிவிட்டோம்: கருணாநிதி
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கான 482 விரிவுரையாளர்கள் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்தன.
இந்த இடங்களை நிரப்ப முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
482 பேர் 'பின்னடைவு' நிலையிலே இருந்தவர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இன்றைக்கு நியமன ஆணை பெற்று கல்லூரிகளுக்கு விரிவுரையாளர்களாக செல்கிறீர்கள்.
கடந்த பல்லாண்டுகளாக எப்படி இந்த பின்னடைவு ஏற்பட்டது என்பதை அமைச்சர் பொன்முடி விளக்கினார். பொதுவாக கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு இடஒதுக்கீடு பற்றி பிரச்சனை எழுந்தபோது பின் தங்கிய மக்கள், முன்னேறிய மக்கள் என்று தான் பகுத்து கூறுவது வழக்கம்.
பின் தங்கிய மக்கள் ஏதோ அவர்களாகவே பின் தங்கிவிட்டதைபோல, 'பின் தங்கிய மக்கள்' என்ற குற்றத்தை அவர்கள் மீதே சுமத்தி வந்தோம்.
ஆனால் திராவிட இயக்கம் வந்த பிறகுதான் அவர்கள் பின் தங்கியவர்கள் அல்ல; வேறு யாராலோ பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற உண்மையை நாடு உணர வேண்டும் என்பதற்காக 'பிற்படுத்தப்பட்டோர்' என்ற சொல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
திராவிட இயக்கம் வந்த பிறகு, என்னைப் போன்றவர்கள் அதை விளக்கிப் பேச ஆரம்பித்த பிறகு, அந்த உணர்வை பெரியார், அண்ணா போன்றவர்கள் ஏற்படுத்திய பிறகுதான்-இவர்கள், அவர்களாகப் பின்தங்கியவர்கள் அல்ல. வேறு யாராலோ பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற உண்மையை நாடு உணர வேண்டும் என்பதற்காக பின் தங்கியவர்கள்' என்ற அந்த வார்த்தைக்குப் பதிலாக பிற்படுத்தப்பட்டோர்' என்ற சொல்லை திராவிட இயக்கம் பயன்படுத்திக் கொண்டு வந்தது.
அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தால்தான் யார் இவர்களை தாழ்த்தியது என்ற கேள்வி எழும். அப்படி பின் தங்க செய்ததற்கு என்ன தண்டனை என்ற கேள்வியும் எழும்.
அதேபோலத்தான் தாழ்த்தப்பட்ட மக்களும். தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்வதற்கு காரணம், யாராலோ இவர்கள் தாழ்த்தப்பட்டிருக்கிறார்கள்- அதனால் தான் தாழ்த்தப்பட்ட மக்கள்.
அப்படி தாழ்த்தப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை கைதூக்கி விடும் முயற்சி தமிழ்நாட்டிலே பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது.
பின்னடைவிலே இருப்பவர்களை முன்னேற்றுகின்ற நிலைமை தொடரக் கூடாது. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் யாரும் பின்னடையவே கூடாது, பின்னடைந்தால் தானே பிறகு அவர்களை முன்னேற்றுகின்ற பிரச்சனை எழப் போகிறது.
பின்னடைவு, பின்தங்கல், தாழ்ந்து போதல், இவைகள் மனித சமுதாயத்தினுடைய உரிமைகளை மாத்திரம், வாய்ப்புகளை மாத்திரம் கெடுக்கக் கூடியவை அல்ல- அவர்களுடைய சுயமரியாதையையே கெடுக்கக் கூடியவை.
இதனால் யாரும் பின்னடைவுக்கு ஆளாவதோ அல்லது பின்தங்குவதோ கூடாது.
ஒரு காலத்திலே நம்மிலே படித்தவர்கள் 100க்கு 3 பேராக இருந்தோம். மற்றவர்கள் 97 பேராக இருந்தார்கள். இன்றைக்கு காலம் மாறிவிட்டது.
3 பேராக இருந்த நாம், 97 பேராக மாறி இருக்கிறோம், மாறுவோம் என்றார் கருணாநிதி.
கருணாநிதியால் தான்...பொன்முடி:
முன்னதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில்,
10 வருடங்களாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள் பணி நிரப்பப்படாமல் இருந்தது. அந்த பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டார். அதன் விளைவாகத்தான் இன்று 482 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. அவர்களில் 275 பேர் பெண்கள்.
மேலும் பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோரும் பணி நியமனம் பெறுகிறார்கள் என்றார்.