விஜயன்-கொலையாளிகள் 'அணிவகுப்பு': சாட்சிகள் அடையாளம்
சென்னை: விஜயன் கொலை வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் கொலையாளிகளின் அணிவகுப்பு நடந்தது. சாட்சிகள் அவர்களில் கொலையாளிகள் யார் என்று அடையாளம் காட்டினர்.
எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடுரோட்டில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி ஷாஜகான் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன் முன்பு எம்ஜிஆரின் உறவுப் பெண்ணும், விஜயனின் மைத்துனியுமான பானு கைது செய்யப்பட்டார். சொத்து தகராறு காரணமாக விஜயன் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கொலைக்கு மூலக்காரணமாக இருந்த போலீஸ்காரர் கருணா மற்றும் கூலிப்படையினர் 6 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விஜயன் கொலையில் முக்கிய புள்ளிகள் சிலருக்கு தொடர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனர். இந்த வழக்கில் 7 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புழல் சிறையில் கொலையாளிகளின் அடையாள அணி வகுப்பு நேற்று நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு முருகானந்தம் முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட கைதிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டனர். இவர்களில் கொலையாளிகளை சாட்சிகள் அடையாளம் காட்டினர்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது. சிபிசிஐடி போலீசாரின் அதிரடி விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications