மே. வங்க முதல்வருடன் ரத்தன் டாடா நாளை சந்திப்பு
கொல்கத்தா: நானா கார் தொழிற்சாலைத் திட்டம் குறித்து டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டச்சார்ஜியை நாளை சந்தித்துப் பேசவுள்ளார்.
சிங்கூரில் அமைந்துள்ள டாடாவின் நானோ கார் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பெரும்பாலானவற்றை விவசாயிகளுக்கு திரும்பித் தர வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கோரி வருகிறார். இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்ைதகளில் உடன்பாடு ஏற்பட்டதைப் போல தோன்றினாலும், மமதாவின் நிலையில் மாற்றம் இல்லாததால், நிலைமை மேலும் மேலும் சிக்கலானது.
இதையடுத்து சிங்கூரைக்காலி செய்ய முடிவு செய்தது டாடா. இதைத் தொடர்ந்து அங்குள்ள தொழிற்சாலையை காலி செய்யும் வேலையில் அது இறங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து சிங்கூரை விட்டுப் போக வேண்டாம் என ரத்தன் டாடாவுக்கு, மேற்கு வங்க முதல்வர் பட்டசார்ஜி கோரிக்கை விடுத்தார்.
இந்தப் பின்னணியில், நாளை ரத்தன் டாடா, பட்டசார்ஜியை சந்தித்துப் பேசவுள்ளார். இதுகுறித்து பட்டசார்ஜி கூறுகையில், நானோ கார் தொழிற்சாலை குறித்து அனைத்து அம்சங்களையும் டாடாவுடன் விவாதிக்கவுள்ளேன்.
தற்போது சிங்கூர் திட்டம் பெரும் குழப்பத்தில் உள்ளது. அதை சரி செய்யும் வகையில் பேச்சு அமையும் என்றார்.
நான்கு நாட்களுக்கு முன்புதான் டாடாவுக்கு, பட்டசார்ஜி கடிதம் எழுதி, சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.