உண்ணாவிரதப் போராட்டம்: சிபிஐ மீது சரத் தாக்கு
சென்னை: அதிகார மையத்தில் இருந்தபோது முயற்சி செய்யாமல், ஆதரவை விலக்கிக் கொண்ட பிறகு இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்துவது தேர்தல் கூட்டணிக்கான முயற்சி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சாடியுள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
இதுகுறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தாங்கள் எந்தெந்த காலத்தில் என்னென்ன செய்தோம், அவர்களுககு உண்மையான ஆதரவாளர்கள் யார் என்றெல்லாம் பட்டியலிட்டு கூறிக் கொண்டிருக்கும் நேரம் இதுவல்ல.
கடந்த 4 ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆதிகார மையத்துக்கு அருகில் இருந்து ஆலோசனை தெரிவித்து வந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அப்போது, இலங்கை தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்துவது நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதற்கான முயற்சிக்கு இலங்கை தமிழர் பிரச்சனையை களமாக பயன்படுத்திக் கொள்கிறதோ என் சந்தேகம் எழுகிறது.
இலங்கை தமிழர் பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலோடு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு செவிசாய்க்காமல் இருந்தால், ஒட்டுமொத்த தமிழக மக்கள் சக்தியும் அரசியல் வேறுபாடுகளை தாண்டி ஒருங்கிணைந்து முடிவு கிடைக்கும் வரை போராட வேண்டும்.
இதைவிடுத்து தனித்தனியாக நடத்தப்படும் போராட்டங்கள் வெறும் அரசியல் பரபரப்புகளையும், கூட்டணி பற்றிய பேச்சுகளை மட்டுமே ஏற்படுத்தி போராட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்துமே தவிர, நிரந்தர தீர்வு காண வழிவகுக்காது.
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தனித்தனியாக நடத்தப்படும் போராட்டங்கள் அரசியல் பரபரப்பையும், எண்ணிக்கையையும் உயர்த்துமே தவிர நிரந்தர தீர்வு காண வழிவகுக்காது என்று சரத்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications