பணி நிரந்தரத்தில் தாமதம் - குமுறும் டாஸ்மாக் ஊழியர்கள்
சேலம்: பணி நிரந்தரம் செய்யாமல் அரசு காலம் கடத்தி வருவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிஐடியூ சார்பில் டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 7,371 டாஸ்மாக் கடைகளில் 34,000 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்திற்கு நியமனம் செய்யப்பட்டதால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு முடித்துக் கொள்ளப்பட்டது.
ஆனால் ஒப்பந்த தொழிலாளர்கள் என்று கூறி பணிப் பாதுகாப்பை அரசு கேள்விக்குறியாக்கி உள்ளது. தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டப்படி 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்த நாளில் இருந்து அவர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது.
ஆனால், பணி நிரந்தரம் செய்யாமல் காலம் கடத்துவது சட்டவிரோதம் ஆகும். தொழிற்சங்கம் ஆரம்பிக்கும்போது தொழிலாளர்கள் மீது அரசு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கிறது. எங்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.