புலிகளின் அரசியல் தலைமையகம் மீது குண்டு வீசி தாக்குதல்

கிளிநொச்சியின் மையப் பகுதியில், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையகம், அமைதி செயலகம் ஆகியவை உள்ளன. நேற்று பிற்பகல் இந்த தலைமையகங்கள் மீது இலங்கை விமானப்படையின் கேபிர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
நேற்று பிற்பகல் 1 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் ஆதரவு இணையதளமும் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் பலியாகியதாக கூறப்படுகிறது.
விமானப்படை விமானங்களைத் தாக்க புலிகளின் விமான எதிர்ப்பு பீரங்கிகள் தயாராவதற்குள் விமானப்படை விமானங்கள் தப்பி விட்டதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
இந்த சம்பவத்தின்போது புலிகளின் அரசியல் தலைமையகத்தில் முக்கியத் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்ததாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் இலங்கை தாக்குதலில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் உள்பட 33 உயர் மட்ட தலைவர்களை ராணுவம் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தாக்குலில் புலிகள் தரப்பில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து தகவல் இல்லை.
போலீஸ் தலைமையகம் மீது இன்று தாக்குதல்...
இந்த நிலையில் ஏ9 சாலையில் உள்ள போலீஸ் தலைமையகம் (தமிழீழ போலீஸ்) மீது இன்று காலை கேபிர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. அதேபோல ஆயுதக் கிடங்கு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காலை 9.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பங்கர்களைத் தாக்கி அழிக்கும் குண்டுகளை வீசி விமானப்படை தாக்குதல் தொடுத்தது. இதில் போலீஸ் தலைமையகத்தின் ஹால் ஒன்று முழுமையாக சேதமடைந்தது.
இருப்பினும் முக்கிய கட்டடம் சேதத்திலிருந்து தப்பி விட்டதாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியில்தான் விடுதலைப் புலிகளின் ரத விமான எதிர்ப்பு பிரிவு உள்ளது.
இதேபோல கிளிநொச்சிக்கு அருகே உள்ள பரவிப்பாஞ்சான் என்ற இடத்திலும் விமானப்படை குண்டு வீச்சை நடத்தியுள்ளாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதலில், போலீஸ் தலைமையகம் அருகே உள்ள தமிழர் மறு சீரமைப்புக் கழகத்தின் கிட்டங்கியும் சேதமடைந்துள்ளது. இங்கு உணவு உள்ளிட்டவை இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
2 கேபிர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளின் தலைமையகங்களைக் குறி வைத்து இலங்கை படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் பரபரப்பு கூடியுள்ளது.












Click it and Unblock the Notifications