ஹிதேந்திரன் அஸ்தி கன்னியாகுமரியில் கரைப்பு
கன்னியாகுமரி: உடல் உறுப்பு தானத்தால் இறவாப் புகழ் பெற்றுள்ள ஹிதேந்திரனின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது.
சென்னையை அடுத்துள்ள திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் அசோகன் - புஷ்பாஞ்சலி தம்பதியினரின் மகன் ஹிதேந்திரன் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். சிகிச்சை பெற்று வந்த அவர் மூளை செயலிழந்தது. இதையடுத்து அவரது உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் தீர்மானித்தனர்.
அதன்படி ஹிதேந்திரனின் இதயத்ைத எடுத்து பெங்களூரைச் சேர்ந்த சிறுமி அபிராமிக்கு பொருத்தினர். பிற உடல் உறுப்புகளும் மற்றவர்களுக்கு பொருத்தப்பட்டன.
ஹிதேந்திரனின் பெற்றோர் செய்த இந்த மிகப் பெரிய செயல் அனைவரின் இதயங்களையும் உருக்கிவிட்டது. முதல்வர் கருணாநிதி ஹிதேந்திரன் பெற்றோரைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டார். அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் ஹிதேந்திரன் வீடு தேடிச் சென்று அசோகன் தம்பதியைப் பாராட்டி வாழ்த்தினர்.
ஹிதேந்திரன் வீடு உள்ள தெருவுக்கு அவரது பெயரை வைக்க நகராட்சி தீர்மானம் போட்டது. ஹிதேந்திரன் குடும்பத்தினருக்கு பல பகுதிகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.
இந்த நிலையில், ஹிதேந்திரனின் அஸ்தியை கன்னியாகுமரியில் கரைக்க அசோகன் குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று ரயிலில் குமரிக்கு வந்தனர். காந்தி மண்டபத்திலிருந்து சங்கிலித்துறை கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, 16 கால் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜோதி நிர்மலா, பொதுமக்கள் உள்ளிட்டோர் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் முக்கூடல் சங்கமத்தில் அஸ்தி கரைக்கப்பட்டது.
பத்திரகையாளர்கள் அஞ்சலி:
ஹிதேந்திரனின் உருவப்படம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் ஹிதேந்திரனின் இதயம் பொருத்தப்பட்ட சிறுமி அபிராமியின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரபல இருதய மருத்துவர் செரியன் கலந்து கொண்டு ஹிதேந்திரனின் உருவப்படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இதில் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி ஹிதேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
டாக்டர் செரியன் பேசுகையில், உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து பொதுமக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்துவதில் பத்திரிகைகளுக்குத்தான் மிகுந்த பொறுப்பும், கடமையும் உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் பலர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினார்கள்.












Click it and Unblock the Notifications