பெங்களூரில் சிவராஜ் பாட்டீல் - ஆளுநருடன் ஆலோசனை
பெங்களூர்: கர்நாடகத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த வன்முறை குறித்து கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூருடன், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
கர்நாடகத்தில் சமீபத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப் பெரிய வன்முறை நடந்தது. இதுதொடர்பாக விரைவான நடவடிக்ைக எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக கர்நாடக போலீஸார் மீதும், அரசு மீதும் குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்தப் பின்னணியில் இத்தகைய சம்பவத்தால் நாட்டின் கெளரவம் கெட்டுப் போய் விட்டதாக கூறியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்றுஇரவு சிவராஜ் பாட்டீல் பெங்களூர் வந்தார். புட்டபர்த்தி வந்த அவர் அப்படியே பெங்களூருக்கு பயணித்தார். ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாநில போலீஸ் துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யாவும் உடன் இருந்தார்.
கடந்த ஜூலை மாதம் முதல் கர்நாடகத்தின் பல பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 29 வழிபாட்டுத் தலங்கள், பிரார்த்தனைக் கூடங்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக மாநில பஜ்ரங் தள ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.