அதிமுகவுடன் கூட்டணிக்கு அதிக வாய்ப்பு: திருநாவுக்கரசர்
மதுரை: ஒத்து கருத்துடைய அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர அதிக வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விலைவாசி விஷம்போல ஏறி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். திமுக அரசின் ரூபாய்க்கு அரிசி திட்டம் ஏமாற்று வேலை. மின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. தேவைக்கேற்ப மின்சாரம் தயாரிக்க அரசு திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் மீண்டும் பொடா சட்டத்தைக் கொண்டு வருவோம். அத்வானியை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்.
தீவிரவாத எதிர்ப்பு, விலைவாசி உயர்வு, சேது சமுத்திர திட்ட பிரச்சனைகளில் எங்களுடன் அதிமுக ஒத்த கருத்துக்களை கொண்டுள்ளது. இதனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
பீகார் வெள்ள நிவாரணத்துக்காக மத்திய அரசு நிதி திரட்டி வருகிறது. பாஜக ரூ.25 லட்சம் வரை நிதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார் அவர்.