மதக் கலவரங்களை தடுப்பது குறித்து 13ம் தேதி முதல்வர்கள் மாநாடு
டெல்லி: மதக்க லவரங்களை தடுப்பது குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வரும் 13ம் தேதி டெல்லியில் முதல்வர்கள் மாநாடு நடக்கிறது.
ஒரிஸா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதும், தேவாலயங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரிஸாவில் தொடர்ந்து கலவரம் நீடித்து வருகிறது, இன்னும் ஓயவில்லை. இதனால் இந்த மாநிலங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களால் ஒருமைப்பாட்டுக்கும் நாட்டின் கௌரவமும் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் கவலை தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் பயணத்தின்போது இது தொடர்பான சங்கடமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்கும்படியும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு அவர் உத்தரவிட்டார்.
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தாக்குதல் நடக்கும் ஒரிசா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கும், தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும், ஒரிஸா, கர்நாடகா அரசுகள் மீது அரசியல் சட்டம் 356 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் மத்திய அரசு எச்சரித்தது.
சமமீபத்தில் மாநிலத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை சமர்பிக்கும்படி ஒரிசா மாநில ஆளுநர் பண்டாரியிடம் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கேட்டார். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கி அமைதி நிலையை ஏற்படுத்தவில்லை என்றால், கடும் விளைவை சந்திக்க வேண்டிவரும் என்று ஒரிஸா, கர்நாடக மாநில அரசுகளை அவர் எச்சரித்தார்.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக அரசியல் தீர்வு காண வேண்டும், அதற்கு அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பிரதமரை வலியுறுத்தியது.
வரும் 17ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் வரும் 13ம் தேதி டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களுடன் மத கலவரங்களை தடுப்பது, நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஆலோசிக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications