இலங்கை ஆளுங்கட்சியின் நியமன எம்.பி.யாக கருணா நியமனம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக செயல்பட்டவர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன். கடந்த 2004ம் ஆண்டில், பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இயக்கத்தில் இருந்து விலகினார். பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற கட்சியை தொடங்கினார்.
இந்த புதிய கட்சியில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலி பாஸ்போர்ட் மூலம் லண்டனுக்கு தப்பினார். ஆனால், இங்கிலாந்து நாட்டின் குடியேற்ற சட்டங்களை மீறியதாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் இங்கிலாந்து அரசிடம் அரசியல் புகலிடம் கோரி மனு செய்தார். ஆனால் பின்னர் இதை திரும்பப் பெற்றார். இந்த நிலையில் சிறைக் காவல் முடிந்த பின்னர், கடந்த ஜூலை மாதம் இலங்கை திரும்பினார்.
இந்தப் பின்னணியில், கிழக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சி, கருணா கட்சி கூட்டணியின் புதிய முதல்வராக கருணா கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்தச் சூழ்நிலையில், சமீபத்தில் கருணா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரும், இலங்கை சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார். தன்னை எம்பியாக்க உதவுமாறு கோரியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கருணா, ஆளுங்கட்சியின் சார்பில், நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அதிபர் ராஜபக்சே பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications