'எக்சிட் போல்' முடிவுகளை வெளியிட மத்திய அரசு தடை
டெல்லி: தேர்தல் காலங்களின்போது வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒளிபரப்பவும், வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பான 1951ம் ஆண்டைய மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.
பிரதமர் மன்மோகன் சிங்தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுரித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், எக்சிட் போல் எனப்படும் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடைசி வாக்கு பதிவு செய்யப்படும் வரை எக்சிட் போல் முடிவுகளை நேரடியாக ஒளிபரப்ப தடை விதிக்கப்படும்.
இதன் மூலம் எந்தவித பாதிப்பும், தாக்கமும் இல்லாமல் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியும். தற்போது பல கட்டங்களாக தேர்தல் நடப்பதால், முதல் கட்ட வாக்குப் பதிவுக்குப் பின்னர் ஒளிபரப்பு செய்யப்படும் எக்சிட் போல் முடிவுகளால் அடுத்தடுத்த கட்ட வாக்குப் பதிவுகளின்போது வாக்காளர்களின் சுதந்திரமான எண்ணங்கள் பாதிக்கப்படுகிறது.
இதைத் தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 126(பி) பிரிவை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் சட்டசபைகள் மற்றும் லோக்சபாவுக்கு நடைபெறும் தேர்தல்களின்போது எக்சிட் போல் முடிவுகளை பரப்பவோ, ஒளிபரப்பவோ தடை செய்யப்படும்.
தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுக்கு அனைத்து பெரிய அரசியல் கட்சிகளின் ஆதரவும் உள்ளது என்றார்.
பஜ்ரங் தளத்திற்கு தடை குறித்து முடிவெடுக்கவில்லை
நேற்றைய கூட்டத்தில், பஜ்ரங்தளத்திற்குத் தடை விதிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும் ஒரிசா மற்றும் கர்நாடகத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பஜ்ரங் தளத்திற்குத் தடை விதிப்பது குறித்து சில மூத்த அமைச்சர்கள் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் தெரிகிறது. பஜ்ரங் தளத்தை தடை செய்யும் அளவுக்கு அந்த அமைப்புக்கு எதிரான ஆவணங்களை உள்துறை அமைச்சர் முதலில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகே தடை குறித்து முடிவெடுக்கலாம் என்றும் அவர்கள் கூறியதால், பஜ்ரங் தளம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஒரிசாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்வது குறித்தும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும் ராஜ்யசபாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் அந்த முடிவு கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரிசா சட்ட ஒழுங்கு நிலை குறித்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், அமைச்சரவைக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பித்தார்.