திமுக-காங். கூட்டணி உறுதியாக இருக்கும்: கனிமொழி
வால்பாறை: திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி உறுதியாக இருக்கும். தேர்தல் நேரத்தில் வேறு எந்த கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.
வால்பாறை அருகே உள்ள டாப்சிலிப்பில் மலைவாழ் மக்கள் உண்டு உறைவிட பள்ளி கட்டட திறப்பு விழா நடந்தது.
இதில் கலந்து கொண்டு கனிமொழி பேசுகையில், நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் பொது விநியோக திட்டத்தின் கீழ் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தரமான அரிசியே வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தப்படும் சதவீதம் குறைவுதான். ரேஷன் அரிசி கடத்துவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு இல்லை என்று நான் கூறவில்லை. மின்சார பிரச்சனை நாடு முழுவதும் உள்ளது. அனைத்து மாநிலங்களும் மின்சார பிரச்சனையை அனுபவித்து வருகின்றன. மகாராஷ்டிரத்தில் மட்டும் 5000 மெகாவாட் மின் பற்றாக்குறை நிலவுகிறது.
மின் தட்டுப்பாடு பிரச்சனைக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது. மின் தட்டுப்பாட்டை போக்கும் முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இதுதொடர்பாக படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான கூட்டணி உறுதியாக இருக்கும். தேர்தல் நேரத்தில் வேறு எந்த கட்சிகளெல்லாம் கூட்டணியில் இணைவார்கள் என்பது இப்போது கூற முடியாது. தேர்தல் வரும்போது பார்ப்போம் என்றார்.