ஜப்பான், சீனாவுக்கு பிரதமர் 21ம் தேதி செல்கிறார்
டெல்லி: ஜப்பான் மற்றும் சீனாவுக்கு அரசு முறை பயணமாக வரும் 21ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் புறப்படுகிறார்.
வரும் 21ம் தேதி அரசு முறை பயணமாக ஜப்பான் மற்றும் சீன நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மன்மோகன்.
முதலில் மூன்று நாள் பயணமாக ஜப்பான் செல்லும் மன்மோகன், அங்கு புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் டரோ அஸோவை சந்தித்து பேசுகிறார். இரு நாடுகளுக்கிடையிலான உறவு, வர்த்தகம், பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசுகின்றனர்.
அந்நாட்டு மன்னர் அகிஹிட்டோவையும் மன்மோகன் சந்தித்து பேசுகிறார். பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்துகின்றனறர். இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
கடந்த மாதம் வரை வெளியுறவு அமைச்சராக இருந்த அஸோ, பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளரா. இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படுத்துவதில் ஆர்வம் கொண்டவராவார்.
ஜப்பான் பயணத்தைத் தொடர்ந்து 5 நாள் பயணமாக சீனாக்கு செல்கிறார் மன்மோகன். அங்கு 24, 25ம் தேதிகளில் நடக்க உள்ள 7வது ஆசிய-ஐரோப்பிய உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசாரம், நிலையான வளர்ச்சி குறித்து விவாதிக்கபட உள்ளது.
இதையடுத்து இந்திய-சீன உறவு குறித்து அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபாவ் மற்றும் தலைவர்களுடனும், மற்ற நாட்டு தலைவர்களுடனும் மன்மோகன் பேசுகிறார்.