மின்வெட்டு அதிகரிப்பு: தொழிற்சாலைகளுக்கு 4 மணிநேரம் கட்!
சென்னை: உயர் அழுத்த தொழிற்சாலைகள் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை மின்சாரம் பயன்படுத்தக்கூடாது என்றும், ஜெனரேட்டர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் மத்திய மின் சட்டம் 2003 கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. தமிழகம் இதற்கு இதுவரை கால அவகாசம் பெற்று வந்தது. இனியும் அவகாசம் கொடுக்க முடியாது என்று மத்திய அரசு மறுத்ததை அடுத்து நேற்றுடன் கால அவகாசம் முடிந்தது. இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி மின்வாரியத்தை உற்பத்தி, விநியோகம், கொண்டு செல்லுதல் என்று 3 பிரிவாக பிரிக்க வேண்டும். இதுகுறித்த ஆலோசிக்க மாநில அமைச்சரவை கூட்டம் கடந்த 7ம் தேதி நடந்தது.
இந்த கூட்டத்தில் ட்ரான்ஸ்மிஷன் கம்பெனி, விநியோகம் மற்றும் உற்பத்தி கம்பெனி என்றும் இவைகளை நிர்வகிக்க ஒரு கம்பெனி என்று பிரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை நடைமுறைபடுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய எரிசக்தி மற்றும் நிதித் துறை செயலாளர்கள் மின் வாரிய தலைவர் மற்றும் அதிகாரிகள் கொண்ட கமிட்டி மற்றும் துணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. துணை கமிட்டி ஆய்வு முடித்து அறிக்கையை உயர் கமிட்டியிடம் வழங்கும். உயர் கமிட்டி அந்த அறிக்கையை அரசிடம் சமர்பிக்கும். இதற்கு 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மின்வாரியத்தை பிரிப்பதற்கு மத்திய மின் ஊழியர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில், இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதற்கு முன்பே கடந்த 2001ல் மின்துறை அமைச்சர்கள் மாநாட்டை டெல்லியில் கூட்டியது.
அதில் பேசிய ஆற்காடு வீராசாமி மின்வாரியங்களை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த 7 ஆண்டுகளில் எந்த ஒரு பெரிய இழப்போ மாற்றமோ ஏற்படாதபோது இப்போது ஏன் இதற்கு சம்மதிக்க வேண்டும்.
ஏற்கனவே இதுபோல பிரித்த மாநிலங்கள் எல்லாமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி மின்வாரிய்த்தை பிரித்த பின்னர் யூனிட்டுக்கு ரூ.3 என்றிருந்த மின்கட்டணம் ரூ.6ஆக உயர்த்தப்பட்டது. மக்களின் போராட்டத்துக்கு பிறகு ரூ.5ஆக குறைக்கப்பட்டது.
அதேபோல இந்த திட்டத்தை செயல்படுத்திய ஒரிஸாவில் புயலால் 400 கிராமங்களில் மின்கட்டமைப்பே அடியோடு பாதிக்கப்பட்டு மின் விநியோகம் இல்லாமல் போனது.
அந்த கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரும்படி பிரிக்கப்பட்ட கம்பெனிகளிடம் கேட்டதற்கு, இது ஒப்பந்தத்தில் இல்லை. அப்படி செய்ய வேண்டுமென்றால் அரசு ரூ.400 கோடி தர வேண்டும் என்று கேட்டுள்ளது.
மத்திய அரசு இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வதை குறைந்தபட்ச செயல் திட்டத்தில் சேர்க்க சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே தமிழக அரசு அதை வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.
இது தொடர்பாக அரசு தரப்பில் கூறப்படுவதாவது, மத்திய அரசின் சட்டத்தை நிறைவேற்ற தவறினால் ஊரக மின்மயகழகம் மூலம் ஆண்டுதோறும் கிடைத்து வரும் ரூ.496 கோடி நிதி தமிழக அரசுக்கு கிடைக்காது. அதேபோல சில புதிய திட்டங்களுக்கு கிடைத்து வரும் நிதியுதவி, மானியம், வரி விலக்குகளும் கிடைக்காமல் போய்விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாட்டை சமாளிக்க மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று முதல் உயர் அழுத்த தொழிற்சாலைகள் மாலை 6 மணி முதல் 10 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்தக் கூடாது. ஜெனரேட்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தவறுவோர் எந்த முன்னறிவிப்புமின்றி மின் இணைப்பு 48 மணிநேரத்திற்கு துண்டிக்கப்படும். பின்னர் மீண்டும் இணைப்பு தருவதற்கான உரிய கட்டணங்கள் பெற்றுக் கொண்ட பிறகே மின் இணைப்பு தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications