இஸ்லாமாபாத்தில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே மிகச் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 8 பேர் பலியாகினர். உள்ளூர் போலீசார் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் மற்றும் இதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.
இஸ்லாமாபாத்திலிருந்து சில மைல் தூரத்துக்கப்பால் உள்ள காவலர் குடியிருப்புப் பகுதியில் இந்த குண்டு வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட அதிர்வில் பல குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு அருகில்தான் தேசிய போலீஸ் அகாடமி அமைந்துள்ளது. சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம், அரசு மருத்துவமனை போன்ற முக்கிய அமைப்புகளும் இங்குதான் உள்ளன.
பாகிஸ்தானை அச்சுறுத்தும் பயங்கரவாதம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை அதிபர் சர்தாரி நேற்று கூட்டியிருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.