தீவிரவாத தாக்குதல்கள்: சிவராஜ் பாட்டீலை நீக்க பாஜக மீண்டும் கோரிக்கை
டெல்லி: டெல்லியிலும் நாட்டின் பிற பகுதிகளிலிலும் தீவிரவாத தாக்குதல்கள் பெருகி விட்டன. இதை கட்டுப்படுத்த முடியாத உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தானாக விலக வேண்டும் அல்லது அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே இக்கோரிக்கையை பாஜக வைத்திருந்தது. இப்போது மீண்டும் அதை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளரான விஜய் குமார் மல்ஹோத்ரா கூறுகையில், தலைநகர் டெல்லியில், தீவிரவாத தாக்குதல்களை தடுக்க உள்துறை அமைச்சரால் முடியாவிட்டால், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களை அவரால் தடுக்க முடியாவிட்டால், அவர் அப்பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. உடனடியாக அவர் விலகி விட வேண்டும்.
நாடாளுமன்றத்திலேயே இதுகுறித்து நாங்கள் கோரிக்கை எழுப்பினோம். அந்தக் கோரிக்கையை தற்போது மீண்டும் வலியுறுத்துகிறோம்.
டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில் அதுகுறித்து உள்ளூர் எம்.பிக்களையோ அல்லது எம்.எல்.ஏக்களையோ அல்லது காவல்துறை அதிகாரிகளையோ கூட்டி விவாதிக்கக் கூட உள்துறை அமைச்சருக்கு தோன்றவில்லை.
தினசரி காலை செய்தித் தாள்களையும், டிவி சேனல்களையும் பார்த்தால், டெல்லியை குற்றங்களின் தலைநகராக வர்ணிக்கிறார்கள். வெளியில் இருப்பவர்கள் டெல்லியின் சட்டம் ஒழுங்கு குறித்து இப்பிட விமர்சித்துப் பேசுவது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
பாஜக டெல்லியில் ஆட்சி அமைத்தால், குற்றச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்றார் அவர்.