புதுவை: 20ம் தேதி குண்டர் தடுப்பு சட்ட மசோதா
புதுச்சேரி: புதுச்சேரியில் குண்டர் தடுப்புச் சட்டத்தை கொண்டு வர அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. வரும் 20ம் தேதி நடக்க உள்ள சட்டமன்ற கூட்டத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் குண்டர் தடுப்புச் சட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கடந்த நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து முதல்வர் வைத்திலிங்கம் தலைமை யில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் வைத்திலிங்கம் கூறுகையில், புதுச்சேரி சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. அலுவல்களை பொறுத்து இக்கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்று அப்போது முடிவு செய்யப்படும்.
இக்கூட்ட தொடரில் குண்டர் தடுப்புச் சட்டம் மசோதா தாக்கல் செய்யப்படும். தமிழகம், ஆந்திரா, கேரளம் உட்பட 14 மாநிலங்களில் இந்த குண்டர் தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது.
புதுச்சேரிக்கு இந்தச் சட்டம் தேவை என்று கருதியே அமல்படுத்த உள்ளோம். புதுச்சேரியில் கடுமையான சட்டங்கள் இல்லை என்பதால் தமிழக பகுதியில் இருந்து குற்றவாளிகள் புதுச்சேரியில் வந்து தங்குவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் புதுச்சேரியில் குண்டர் தடுப்பு சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளோம்.
இந்த சட்டம் 1999ம் ஆண்டே புதுச்சேரியில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்பு கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
புதுச்சேரியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வருவதும், ஒரு கொலைக்கு பழிவாங்க மற்றொரு கொலை நடப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்த சட்டத்தை அமல் செய்வதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இதற்கு ஆதரவு இருந்தது. எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை. சட்டத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றுதான் கூறினார்கள். எனவே பாதுகாப்பு கருதிதான் இதனை நடைமுறைபடுத்த உள்ளோம் என்றார்.