சாலை விபத்து: கணவர் பலி, நீதிபதி கவலைக்கிடம்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் காரில் வந்த பெண் நீதிபதியின் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெண் நீதிபதி படுகாயம் அடைந்தார்.
சென்னை 6வது டிவிஷன் சிவில் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி வருபவர் மீனாட்சி (42). இவரது கணவர் பழனியப்பன் (50).சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இருவரும் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு கார் மூலம் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் மீது எதிரே வந்த அரசு பேருந்து பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் நீதிபதி மீனாட்சியும், அவரது கணவரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பழனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.
நீதிபதி மீனாட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications