தன் பிறந்த நாளுக்காக கைதிகளை விடுதலை செய்தவர் ஜெ!-கருணாநிதி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த 1405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டது குறித்து ஒரு மாதம் கழித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளின் துணையோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க செய்யப்படும் முயற்சி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகள் விடுதலை பற்றி ஏற்கனவே நான் விளக்கம் அளித்த பிறகும், ஒரு மாதம் கழித்து ஜெயலலிதா மீண்டும் அந்த பிரச்சனையை கிளப்பியுள்ளார்.
புகழ்பெற்ற மறைந்த தலைவர்களின் பிறந்தநாளையொட்டியோ, சில முக்கிய நிகழ்வுகளையொட்டியோ சிறையில் நீண்ட காலம் இருப்போரை விடுதலை செய்வது திமுக ஆட்சியில் புதிதாக செய்யப்படும் காரியமல்ல.
இன்னும் சொல்லபோனால் யாருமே செய்யாத காரியமாக ஜெயலலிதா, தான் முதலமைச்சராக இருந்தபோது தன் பிறந்தநாளையொட்டியே 1992ம் ஆண்டு 230 பேரையும், 1993ம் ஆண்டு 132 பேரையும், 1994ம் ஆண்டு 163 பேரையும் விடுதலை செய்தார்.
அவரது ஆட்சி காலத்தில் அண்ணா பிறந்தநாளுக்காக யாரும் விடுதலை செய்யப்படவில்லை.
கட்சி பேதமில்லை!
ஆனால், திமுக ஆட்சி காலத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி, ஆண்டுதோறும் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு அண்ணாவின் நூற்றாண்டு என்பதால் ஒரு சிறப்பு நேர்வாக 7 ஆண்டுகாலம் சிறையில் இருந்த ஆயுள் கைதிகளை திமுக அரசு விடுதலை செய்துள்ளது.
இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக ஒரு முடிவெடுத்து விடுதலை செய்யும்போது யார் எந்த கட்சி என்று பார்த்து விடுதலை செய்ய முடியாது. ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் என்பதற்காக தனிவிதிமுறையை பயன்படுத்த முடியாது.
ஜெயலலிதா தன் ஆட்சி காலத்தில் தன் பிறந்தநாளுக்காக கைதிகளை விடுவித்த போது கட்சி பார்த்தா விடுவித்தார்.
மேலும், கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் இதேபோல இடது முன்னணி அரசுகள் பலரை விடுதலை செய்துள்ளனர். எனவே, கைதிகளை விடுதலையில் உள்நோக்கம் கற்பிப்பது நல்லதல்ல என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications